நெஞ்சு பொறுக்குதில்லையே…
பச்சிளங்குழந்தைகளுக்குப் பாலியல் தொழிலா?
காலங்காலமாக பெண்ணுரிமைக்காக தலைவர்கள் பலரும் உரிமைக்குரல் கொடுத்தவண்ணம் உள்ளனர். பெண்களுக்கெதிரான குற்றச் செயல்பாடுகளை எதிர்க்கும் விதத்தில் போராட்டங்கள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும், பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள் ஒருபக்கம் அதிக அளவில் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.
வரதட்சணைக் கொடுமை, பாலியல் பலாத்காரங்கள் முதலியவை பஞ்சமில்லாமல் நடக்கின்றன. பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க சமுதாயத்தின் கட்டுப்பாடுகளும் பெண்களுக்கெதிராக பூதாகாரமாக தலையெடுத்துள்ளன. இவையெல்லாவற்றையும் தகர்க்கும் விதத்தில் பத்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கும் உண்மையாக சமுதாயத்தில் வேறூன்றத் தொடங்கியுள்ளது. போதைப்பொருள் கடத்தல், ஆயுதக்கடத்தலுக்கு அடுத்தபடியாக பெண்குழந்தைகள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது அதிகரித்து வருவது சமுதாயக் கேடாகத் தொடர்கிறது.
1980-ம் ஆண்டுகளில் 14-16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். அதன்பின் இந்த வயதுவரம்பு 10-14 ஆக குறைந்தது. சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்கிற அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் கடத்தப்பட்டு, பாலியல் தரகர்களிடம் விற்கப்படுவதாகவும், அவர்கள் சிறுவயதிலேயே எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவதாகவும் ஐ.நா.வின் போதை மற்றும் குற்றப்பிரிவு அலுவலகம் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியா, நேபாளம், வங்கதேசம் போன்ற தெற்கு ஆசிய நாடுகளில் பெண் குழந்தைகள் அதிக அளவில் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். பெரிய பெண்களுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொண்டால் எய்ட்ஸ் மற்றும் பாலியல் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், பல ஆண்கள் சிறு வயது பெண் குழந்தைகளுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதையே அதிகமாக விரும்புகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இதன் காரணமாகவே பெண் குழந்தைகள் அதிக அளவில் கடத்தப்படுவதும் அதிகரித்துள்ளது. நம் நாட்டில் சட்டங்களில் உள்ள ஓட்டைகளும் இதற்கு சாதகமாக உள்ளது. கடத்தல் போன்ற குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அதிகமாக மாட்டிக் கொள்வதில்லை. இதையும் மீறி சட்டத்தின்பிடியில் சிக்கிக் கொண்டாலும் விரைவிலேயே தப்பித்து விடுகிறார்கள். எந்தவித தண்டனையையும் அவர்கள் அனுபவிப்பதில்லை. அதே குற்றத்தை திரும்பவும் செய்யத் தொடங்கி விடுகிறார்கள்.
கடத்தலின் மூலமாக பெண் குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது ஒரு ரகம் என்றாலும் பல குழந்தைகள் குடும்ப சூழல் காரணமாக பெற்றவர்கள் மற்றும் உறவினர்களால் விற்கப்படுகிறார்கள் என்பதும் நடைமுறையில் உள்ளது. வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவையே இதற்கும் காரணமாக உள்ளது. கட்டுப்பாடு இல்லாமல் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதும் இதற்கான காரணங்களில் ஒன்றாக உள்ளது.
சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே, பெற்றவர்களே குழந்தைகளை விற்கும் அவல நிலை மாறும். இதற்கு அவர்களை மட்டுமே நாம் காரணகர்த்தாவாக்க முடியாது. மக்களுக்கு மேற்கூறிய அடிப்படை உரிமைகளைத் தரத்தவறிய அரசாங்கத்தையும் நாம் குறைக்கூற வேண்டியுள்ளது. மக்கள்தொகை அதிகமாக உள்ள நமது நாட்டில் மனிதசக்தியை பயன்படுத்தி பல ஆக்கப்பூர்வ திட்டங்களை அரசு கொண்டு வருவது இந்த சூழ்நிலையை மாற்ற உதவும்.
பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. எயிட்ஸால் பாதிக்கப்பட்டு, ஐதராபாத்தில் உள்ள மறுவாழ்வு மையம் ஒன்றில் இருந்த மரு என்ற சிறுமி சமீபத்தில் இறந்தார். எய்ட்ஸ் என்ற உயிர்க்கொல்லி நோயினால் பாலியல் கொடுமைகள் மறையும் என்ற எண்ணத்திற்கு மாறாக உலகில் மனித வக்கிரங்கள் எவ்வாறெல்லாம் புதிய வடிவில் அதற்கான தீர்வுகளைக் காண முற்படுகிறது என்பதைக் கருத்தில் கொள்ள நேர்ந்தால் வருத்தத்தை மீறிய சலிப்புணர்வே மிஞ்சுகிறது.
பாலியல் கொடுமைகளுக்கு ஆளான பல சிறுமிகள் ஊமையாகவும், மனநலம் பாதிக்கப்பட்டும் உள்ளனர், அவர்களுடைய வயதிற்கான கல்வி, விளையாட்டு சந்தோஷம், பாதுகாப்பு, அரவணைப்பு போன்ற எதுவும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. மாறாக எயிட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களின் பிடியில் அவர்கள் தள்ளப்படுகிறார்கள். மரு என்ற சிறுமியைப் போன்று எத்தனை சிறுமிகள் தனக்கு என்ன நேர்கிறது என்ற புரிதல் இல்லாமலேயே இறக்க நேர்ந்ததோ. வெளியில் தெரிவது ஒன்றிரண்டு விஷயங்கள் மட்டுமே. வெளியில் தெரியாமல் இதைப்போல எத்தனை சிறுமிகளின் வாழ்வு பலியிடப்பட்டுள்ளதோ. இதற்கெல்லாம் இந்த சமூகம் எதை பதிலாகத் தரப்போகிறது.
நொய்டாவில் பல பெண்குழந்தைகள் ஒரு காமக்கொடூரனால் சமாதியாக்கப்பட்ட கொடூர சம்பவம் நாட்டு மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதற்கான தீர்வு உடனடியாக வழங்கப்படவில்லையே. வழக்கு நடந்துக் கொண்டிருக்கிறது. அது முடிந்து தீர்ப்பு வெளியிடப்படுவதற்குள் மக்கள் அச்சம்பவத்தின் தாக்கத்தை மறந்தே விடுவார்கள்.
பெண் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் இத்தகைய கொடுமைகளைத் தடுக்க ஐ.நா. ‘பரிசு’ என்ற திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. சமூக ஆர்வலர்கள், தனியார் நிறுவனங்கள், அரசு மற்றும் பொதுமக்களுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் இத்தகைய பாலியல் கொடுமைகள் முடிவுக்கு வராவிட்டாலும் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்படும் என நம்பலாம்.
வஞ்சனைகளைக் கண்டால் மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா – என்பது பாரதியின் கூற்று. தனக்கு நேர்ந்தது வஞ்சனை என்று தெரிந்துக் கொள்வதற்கு முன்னரே அந்தக் குழந்தை இறக்க நேரிடுவது தான் கொடுமை.
அக்கினிக் குஞ்சை எடுத்து காட்டில் வைத்தால் காடு வெந்துத் தணியும் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் நம் சமுதாயம் பெண்குழந்தைகளுக்கு எதிராக இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அரசும் இதற்கெதிரான நடவடிக்கைகளை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகிறது. நாட்டின் வருங்காலத்தை ஏற்கக் கூடிய ஆரோக்கியமான புதிய சமுதாயத்தினரை உருவாக்க வேண்டிய நிலையில் இருக்கும் இந்த சமுதாயம் தன்னுடைய காம இச்சைக்காக பச்சிளம் குழந்தைகளை பலியாக்கும் அட்டூழியக் கொடுமைகளைத் தொடர்ந்தால் காடு வெந்து தணியாது… நாடு தான் வெந்துப்போகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பெண்களின் காலக்கனவு…
சுற்றிலும் பச்சைப்பசேல் என புல்வெளி… மரக்கூட்டங்களுக்குள்ளே பழமையான கட்டிடங்கள்… ஆள் அரவம் குறைந்த சனிக்கிழமை மாலையில் இராணி மேரிக் கல்லூரியின் நிலை இவ்வாறிருக்க என்னடா இங்குதானே ‘ஆவண நாடகம்’ நடைபெறுவதாகக் கூறினார்கள் என்று நம் கை தன்னிச்சையாக அழைப்பிதழை மறுபரிசீலனை செய்கிறது. பின்பு அங்கிருந்த ஒருவரின் வழிகாட்டுதலில் கலை அரங்கத்திற்குள் சென்றால் ஏதோ மகளிர் திருவிழாவிற்கு வந்து விட்டோமோ என்ற பிரமையே நமக்கு ஏற்பட்டது. கனிமொழி, தமிழச்சி, சரஸ்வதி, அருண்மொழி, கலாராணி, மங்கை, கீதா உள்ளிட்ட பலரும் கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருந்தனர். உள்ளே நுழையவே வழியில்லை. எல்லா வழிகளிலும் ஆர்வத்துடன் எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பவர்களில் பெண்களை விட ஆண்களே அதிகம்… எல்லாவற்றையும் கடந்து உள்ளே நுழைந்து பார்த்தபின்பே அவர்களின் ஆர்வத்திற்கான காரணம் என்னவென்று புரிந்தது.
மேடை, அலங்காரங்கள் இல்லாமல் ஒரு நாடகத்தை அரங்கேற்ற முடியுமா?… முடியும் என நிரூபித்திருக்கிறார்கள் ‘காலக்கனவு’ ஆவண நாடகத்திற்கு செயல்வடிவம் கொடுத்த அ.மங்கை, கூத்துப்பட்டறை கலாராணி, சரஸ்வதி மற்றும் வ.கீதா குழுவினர்.
நவீன நாடகத்தில் இதுவும் ஒரு வகை என்றாலும் பார்வையாளர்களையும் நாடக மாந்தர்களாக உள்நுழைத்திருப்பது புதுமையான உத்தியாக்கப் பட்டிருக்கிறது.
அக்டோபர் 13-ம் தேதி நடத்தப்பட்ட இந்த ஆவண நாடகத்தைப் பற்றி மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். வந்தவர்கள், வராதவர்கள் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் சரியாக மாலை 4 மணிக்கு ஆரம்பித்தது தான் அது.
பெண்களின் அடக்குமுறைக் காலத்தில் ஆரம்பித்து படிப்படியான பெண்ணிய விடுதலைக்கான போராட்டத்தையும், அதற்கான ஆதரவினையும் ஆவணங்களின் துணைக் கொண்டு விளக்க முற்பட்டுள்ளது இந்த நாடகம்.
ஆரம்ப கால மதமாறுதலுக்கான விஷயங்களில் முக்கியமானதாக இருந்தது பெண்களுக்கான அடக்குமுறைகளே. இந்த அடக்குமுறைகளே, பாதிக்கப்பட்டவர்களைக் குறிப்பாக பெண்களை கிறித்துவ மதத்திற்கு மதம் மாற வைத்தது என்பன போன்ற கருத்துக்களை இந்த நாடகம் எடுத்துக் காட்டியது.
உண்மையான பெண் விடுதலைக்குப் பிள்ளைப் பெறும் தொல்லை அடியோடு ஒழிந்துப் போக வேண்டும். அது ஒழியாமல், சம்பளம் கொடுத்து புருஷனை நியமித்துக் கொள்வதாக இருந்தாலும் பெண்கள் பொதுவாக விடுதலை அடைந்து விடமுடியாது. 12.08.1928-ஆம் தேதியிட்ட குடியரசு இதழில் வெளிவந்த பெரியாரின் இந்த கருத்தைக் கூறிய நாடக்குழுவினர், அது என்ன சம்பளம் கொடுத்து புருஷனை நியமித்துக் கொள்வது என்பனப் போன்ற ஏளனக் கேள்விகளையும் கேட்கத் தவறவில்லை.
இந்த அளவுக்கு யோசிக்க வைத்த பெரியாருக்குக்கூட உந்துதலாக டாக்டர் முத்துலட்சுமி, மூவாலூர் இராமிர்தம் அம்மையார் போன்ற பெண்களே இருந்துள்ளார்கள் என்ற வரலாற்று உண்மைகளை இந்த ஆவண நாடகம் எடுத்துக் கூறியது நம்மை வியப்பில் ஆழ்த்தியது.
தேவதாசி இசைவேளாளர் வகுப்பைச் சேர்ந்த முத்துலட்சுமி, இராமாமிர்தம் போன்றவர்கள், ‘பொட்டுக் கட்டுதல்’ என்ற மரபில் வந்திருந்தாலும் அதையெல்லாம் உடைத்தெறிந்து வெளிவந்து அத்தகைய பெண்களுக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் போராடியதை குறிப்பிட்டது இளையத் தலைமுறைக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும் வண்ணம் இருந்தது.
தேசாபிமானத்திற்கு சமமாக கற்பாபிமானத்தைக் (கற்பின் மேல் இருக்கவேண்டிய பற்று) கூறி வந்த அந்தக் கால சமூகத்தைச் சாடிய நாடகக் குழுவினர், பலவிதக் கலைகளில் சிறந்து விளங்கிய கே.பி.சுந்தராம்பாள் போன்றவர்களும் தன் கணவனுக்கு அடங்கி வாழ்ந்த வாழ்க்கை வரலாறுகளையும் படம் பிடிக்கத் தவறவில்லை.
ஒன்றும் தெரியாது என்று சமமான போட்டிக்கு அழைப்பு விடுத்த கணவர் கிட்டப்பாவுக்கு எதிராக தன் திறமையை நிரூபித்த கே.பி.சுந்தராம்பாளை, ‘நாய், தெரியாதென்று ஏமாற்றினாயோ…’ என்று கிட்டப்பா கேட்டது வரையிலான பதிவுகளும் இதில் இடம் பெற்றது சிறப்பு.
பெண்கள் விடுதலைப் போரில் ஊக்கத்துடனும், அதே சமயம் தன் குடும்பத்திற்கு தெரியாமல் மறைமுகமாகவும் கலந்து கொண்டதை ஒரு பாடலுடன் காட்சிப்படுத்தி பார்வையாளர்களையும் ஊக்கப்படுத்தியதையும் பாராட்டியே தீர வேண்டும்.
வேட்டி, அரைக்கை சட்டை மற்றும் சிவப்புத் துண்டுடன் வலம் வந்து போராட்டங்களில் கலந்து கொண்ட மணியம்மா என்பவர், மான் முட்டி உயிரிழந்துள்ளார் என்ற செய்தியை ஏற்ற இறக்கத்துடன் பறை இசையுடன் கூடிய பாடல் மூலம் புரிய வைத்துள்ளனர்.
“ஆடு முட்டி கேட்டதுண்டு
ஆமை முட்டி கேட்டதுண்டோ
மாடு முட்டி கேட்டதுண்டு
மான் முட்டிக் கேட்டதுண்டோ”
இந்தப் பாடல் மூலம் அவரின் உயிரிழப்பையும் கேள்விக் குறியாக்கியுள்ளனர் இந்தக் குழுவினர்.
இத்தகைய பெண்களின் வேள்விகளாலும், இவர்களுக்கு ஆதரவுத்தீயாக குரல் கொடுத்த சுயமரியாதைக் கோட்பாடுகளிலும் கவரப்பட்டு 70 ஆயிரம் சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றதைப் பெருமைப்படுத்தியது காலக்கனவு எனும் இந்த ஆவண நாடகம்.
இதில் முக்கியமாய் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினரும், இந்த ஆவண நாடகத்தில் முழங்கியவர்களில் ஒருவருமான கவின்மலரின் பெற்றோர், இவர்களது திருமணம் பெரியாரால் நடத்தப்பட்ட முதல் இந்து-முஸ்லிம் திருமணம் என்ற செய்தி அரங்கில் வெளிப்படுத்தப்பட்டதும் கூடியிருந்தோரிடையே இனிமையைக் கூட்டியது.
இந்த நாடகத்தில், முழக்கமிட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் பொன்னி, சட்டக்கல்லூரி மாணவியாக அறிமுகப் படுத்தப்பட்ட இவரின் முழக்கத்திற்கு பெண்களுடன் சேர்ந்து ஆண்களும் கைத்தட்டலில் அரங்கை அதிர வைத்தனர். கல்பனா, ரேவதி போன்றவர்களின் நடிப்பும் பெண்ணியவாதிகளை யோசிக்க வைத்தது. இவர்களைத் தவிர அருண்மொழி, தமிழச்சி, அமுதா, யாழினி, அனிதா, நங்கை, ஓவியா, ஜெய்கணேஷ் போன்றவர்களும் கூட்டத்தினரிடையே முழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
“விவாத மேடைகளில் அனைத்து விஷயங்களையும் பேசிவிட்டு இறுதியாக 10 நிமிட அவகாசம் இருந்தால் பேசப்படும் விஷயமாக பெண் சுதந்திரம் உள்ளது” என்று சமூகத்தைப் பார்த்துக் குரல் எழுப்பும் அளவிற்கு உரிமையும், எழுச்சியும் கொண்டு தங்களது விடுதலைக்காக தாங்களே போராடிய பெண் போராளிகளின் போராட்டங்கள், பாரதியுகம் தொடங்கி சுயமரியாதைக் காலம் வரை செழித்திருந்தது. ஆனால் கால வெள்ளோட்டத்தில் அதைத் தலைமையேற்றுத் தொடர்வார் யாருமின்றிச் சுயநலச் சமூகத்தால் வழக்கம்போல நசுக்கப்பட்டதைக் கூறி ஒரு பாடலுடன் காலக்கனவு முடிக்கப்பட்டது.
ரோஜா முத்தையா நூலகத்தின் உதவியுடன் காட்சிக்குட்படுத்தப் பட்ட ஆவணங்களை நாடகம் முடிந்த பின்பும் பார்வைக்காக வைத்திருந்தது நல்ல அணுகுமுறை.
பெண் சுதந்திரம் என்பது எத்தனை பெண்களின் தியாகங்களுக்கு நடுவே செழித்து வளர்ந்தது என்பதைக் கூறிய இந்தக் காலக்கனவு, அந்தக்காலக் கனவுகளுடனேயே முற்றுப் பெற்றது. பாதியில் நிறுத்தப்பட்ட இத்தகைய போராட்டங்களின் தொடர்ச்சியான வழிமுறையைக் கூற முற்பட்டிருந்தால் நலமாக இருந்திருக்கும்.
அருமையான இந்த முயற்சியை, அனைவரும் அறியும்வண்ணம் பெரிய அளவில் செய்திருந்தால் சமூகத்தில் சிறிய அளவிலான சலசலப்பையாவது இந்தக் காலக்கனவு செய்திருக்கும். மேலும் வந்த அனைவரையும் சமமாக பாவித்து நாடாளுமன்ற உறுப்பினர் முதல் சாமானியர் வரை அனைவரையும் கீழே அமர வைத்தது நலம். ஆயினும், உள்ளே அதிக இடமின்மையால் வெளியில் நின்றுக் கொண்டிருந்ததைத் தவிர்த்திருக்கலாம். அனைவரும் காணும் வண்ணம் பெரிய அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் இந்தச் செயல்பாட்டின் மூலம் நல்லப் படைப்புகளுக்கான மக்களின் ஏக்கமும், எதிர்பார்ப்பும் வெளிப்பட்டுள்ளது.
Hello world!
Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!