ஈராக் (கனவு தேசம் சிதைக்கப்பட்ட வரலாறு)
ஏழாயிரம் ஆண்டுகால வரலாறைக் கொண்ட ஒரு நாடு; சுமேரியர், அக்கடியர், அசிரியர் போன்ற மன்னர்களின் ஆட்சியில் பல்வேறு வகையான முன்னேற்றங்களைக் கண்ட ஒரு நாடு; சிற்ப கட்டடக் கலைகளுக்கு சான்றாக விளங்கும் பாபிலோனிய தொங்கும் தோட்டம் முதல் முதன்முறையாக நிரந்தர ராணுவம் முதலிய அரசியல் வழிமுறைகளை செயல் படுத்திய ஒரு நாடு; சக்கரம், நீர்பாசனம், காலண்டர் உள்பட பல்வேறு பொருட்களைக் கண்டுபிடித்து உலகத்திற்கு அறிமுகப்படுத்திய நாடு, ஒரு அல்லது ஒருசில நாடுகளின் சுயநலத்தாலும், வர்த்தகம் முதலிய காரணங்களினாலும் சிதைக்கப்பட்டு, இனி மேலெழுந்து வருவது சந்தேகம் என்னும் நிலைக்கு தள்ளப்பட்டது என்றால் அதற்கு மிகப்பெரிய உதாரணம் ஈராக்.
ஈராக்கின் பெருமை கணக்கிலடங்காதது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கான உரிமைகளை சமநிலைப் படுத்தியதும், விவாகரத்து உரிமை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதும் வரலாறு காட்டும் உண்மை.
உலகின் முதல் காவியம் இங்குதான் படைக்கப்பட்டுள்ளது. கூனிபார்ஃம் என்ற முக்கோண வடிவ முத்திரைக் காவியமாக இது படைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய வரலாறுகளைக் கொண்ட ஒரு நாட்டில் ஆரம்பம் முதலாகவே ஏற்றத் தாழ்வுகளும் பிரிவினைகளும் இருந்து வந்ததை சாபக்கேடாகவே கொள்ள வேண்டும். இத்தகைய ஏற்றத்தாழ்வுகளும், கருப்புத் தங்கம் எனப்படும் க்ரூட் ஆயிலும் ஒருங்கிணைந்து அங்கு இருந்ததால் காலங்காலமாகவே அந்நியரின் கழுகுப் பார்வைகளில் தப்ப இயலாமல் இந்த நாடு இருந்துள்ளது.
அண்டை மாநிலங்களான ஈரான், சவுதி போன்ற நாடுகளிடம் சுமூக மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு முன்னேற்றப் பாதையில் நடை போட்டிருக்க வேண்டிய இந்த நாடு, ஈரான், குவைத் போன்ற நாடுகளிடம் நட்புறவை வளர்க்கத் தவறியதால், எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்திருந்த ஆதிக்க சக்திகளின் வலையில் தாமாகவே போய் மாட்டிக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
மேலும் ஆதிக்க சக்திகளுடன் ஆராய்ந்து உறவு கொண்டிருக்க வேண்டிய அரசு, நெருக்கடி நிலை காரணமாகவோ, அரசியல் நிலை காரணமாகவே ஒப்பந்தங்கள் போட்டதும் அந்நியர்களை தாமே வரவேற்பதற்கு இடம் கொடுத்துள்ளது. ஈரான் ஈராக் போரில் ஈராக்கிற்கு மறைமுகமாக உதவி புரிந்த அமெரிக்கா அந்தப் பக்கம் சென்று குவைத்திற்கு ஆதரவு தெரிவித்து ஈராக்கின்மீது படைத் தொடுத்துள்ளது உச்ச கட்ட அரசியல் தந்திரம்.
மன்னராட்சி நடைபெற்றுவரும் நாடுகளும் சுதந்திரமாக அரசாட்சி செய்து கொண்டிருக்க, மக்களாட்சி நடந்துவந்த ஈராக்கில் வெடிகுண்டுத் தாக்குதல்களும், படுகொலைகளும் மலிந்துள்ளதற்கு காரணம் என்ன என்ற மக்களின் ஆதங்கங்களுக்கு வரலாற்றை முன்வைத்து, அமெரிக்காவின் அரசியல் தந்திரங்களையும் பட்டியலிட்டிருக்கிறது பாவை சந்திரன் எழுதி வெளிவந்துள்ள ஈராக் என்ற நூல்.
இத்தகைய அரசியல் குறுக்கு புத்திகளுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது வர்த்தகம் என்பதையும் இந்த நூல் எடுத்துக் காட்டுகிறது.
உள்நாட்டில் கட்டுப்பாட்டைக் கொண்டுவர முயற்சி செய்த சதாமின் நிலையையும், அதற்காக அவர் மேற்கொண்ட சில அடக்குமுறைகள் அந்த நேரத்தின் தேவை என்பதையும் குறிப்பிட இந்த நூல் மறக்கவில்லை.
ஆதிக்க சக்திகளின் தந்திரங்களால் ஏற்பட்ட இந்தப் போரினால் ஈராக்கின் பொருளாதார சிதைவு, குழந்தைகள் உள்பட நாட்டு மக்கள் அனைவரும் எதிர்கொண்ட உடல்நலக் குறைபாடுகள் முதலியவை எடுத்துரைக்கப் பட்டுள்ளன.
ரசாயன உயிரி ஆயுதம் தயாரிக்கப்படவில்லை என்று தங்கள் நாட்டு நிபுணர்களே தெரிவித்த பின்பும் தாக்குதல்களைத் தொடர்ந்த அமெரிக்காவின் சுயநலப்போக்கிற்கு ஈராக்கின்மேல் இருந்த வர்த்தகக் காதல் காரணப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நூலில் பிற்சேர்க்கையாக க.நா.சுப்ரமணியம் மொழிபெயர்த்த ‘கில்காமெஷ் காவியத்தின்’ முன்னுரையும், அரேபியாவில் ஆதிக்க சக்திகளுக்கு உதவி புரிந்த லாரன்ஸ் என்பவரின் வரலாற்றைக் கூறும் லாரன்ஸ் ஆஃப் அரேபியாவின் திரைக்கதையும் சேர்க்கப் பட்டுள்ளது சீரிய முயற்சி. அந்நாட்டு மன்னர்களின் வாழ்க்கை நிலைகளைப் பறைசாற்றும் கண்டுபிடிப்புகளும், தற்காலத்திய வரலாற்றையும் கட்டியம் கூறும் புகைப்படங்களை அங்காங்கே இணைத்திருப்பது கருத்திற்கு மட்டுமல்லாது பார்வைக்கும் நலம் பயக்கிறது.
ஈராக் பற்றிய வரலாற்று தெளிவை இந்த நூல் ஏற்படுத்தியிருப்பதை வரவேற்கலாம். உலகத்தின் கனவு தேசமாக இருந்திருக்கக்கூடிய ஈராக் உலக நாடுகளின் கண்முன்னே சிதைக்கப்பட்டுள்ளது. ஆதிக்க சக்தியின் அடுத்த இலக்குகளும் உலக மக்களின் கண்முன்னேயே குறிவைக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஆயினும் உலக நாடுகள் மௌனம் சாதித்து வருகின்றன என்ற உண்மையை அச்சுறுத்தல் இல்லாமல் தெளிவாக உணர்த்திய ஆசிரியரைப் பாராட்டலாம்.
ஈராக்
ஆசிரியர்: பாவை சந்திரன்
வெளியீடு: கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ்
#92/66, டி.எஸ்.வி. கோயில் தெரு,
மயிலாப்பூர்,
சென்னை – 4.
பக்கங்கள்: 228
விலை: ரூ. 100
ஆண்டு: டிசம்பர் 2004.