மரணத்திற்கு மரணம் தீர்வாகுமா?

ஜனவரி 16, 2008 at 1:16 பிற்பகல் (Article)

மனிதர்கள் நாடோடிகளாக வாழ்ந்த காலத்தில் கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள் என்பதும் கிடைத்ததை உண்டு தாங்கள் செல்லும் இடங்களில் தங்களுடைய குடிப்பகுதிகளை நிர்மாணித்துக் கொண்டு வாழ்ந்தார்கள் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. ஆற்றுவழி சமுதாயத்திற்கு மனித இனம் மாற்றம் பெற்றபோதே, தான், தனக்கு என்ற கொள்கைகள் வலுப்பெறத் தொடங்கின. மது, பொன், பெண், பொருள் போன்றவற்றிற்கான தேடல்களும் அதுகுறித்த போராட்டங்களும் அத்தகைய காலகட்டங்களிலேயே தொடங்கின.

பிறகு ஒரு தலைவனுக்குகீழ் வாழ சமுதாயம் முற்பட்டபோது குற்றங்கள் வரைமுறை செய்யப்பட்டு அதற்கான தீர்வுகளும் காணப்பட்டன. கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் போன்ற வகையான தண்டனைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன. மரண தண்டனை என்பதும் இத்தகைய மன்னராட்சி காலத்தில்தான் மனித இனத்தில் வேரூன்ற ஆரம்பித்தது.

ராஜ்யங்களுக்காகவும், பெண்களுக்காகவும் தங்களுடைய ஆளுமைத்திறனை வெளிக்காட்டுவதற்காகவும், தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் மரண தண்டனையை ஆயுதமாகப் பயன்படுத்தினார்.

இதிலும் ஒரே குற்றத்திற்கு உயர்ந்த ஜாதியினருக்கு ஒரு தண்டனையும் அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு கொடுமையான தண்டனைகளும் கொடுக்கப்பட்டதையும் வரலாறு பதிவு செய்துள்ளது.

பழம்பெருமை பேசும் உலக நாடுகளின் வரலாற்றை புரட்டினால், அதில் ரத்தவாடை வீசுவதைத் தவிர்க்க முடியாது. போர் முதலிய காரணங்களுக்காக மக்கள் கொன்று குவிக்கப்பட்டதை அது தெரிவிக்கும்.

ஒவ்வொரு முறையும் ஆட்சி மாற்றங்களுக்கு உட்படும் நாடுகளில் புதிதாக பதவியில் அமரும் ஆட்சியாளர்கள், முந்தைய ஆட்சியினர் மீதான தங்களின் பழியுணர்வை அந்த நாட்டை அழித்து தீக்கிரையாக்குவதன் மூலமும் அதன் மக்களைக் கொன்று குவிப்பதன் மூலமுமே தீர்த்துக் கொண்டார்கள் என்பதும் வரலாறு காட்டும் உண்மை.

இதற்கு ஆதாரங்களாக நம் நாட்டின் சேர, சோழ பாண்டியர்களின் வரலாறுகளையும், உலக அளவில் ஏற்பட்ட உலகப்போர்களையும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னராட்சி மாறி மக்களாட்சி ஏற்பட்டபின்பு சட்டங்களின் துணைகொண்டு பகிரங்கமாக மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தற்போதைய காலகட்டத்திலும் மனித நேயத்துக்கு மாறான இந்த இழிநிலை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவது வேதனைக்குரிய விஷயமாகும்.

உணர்வு ரீதியாகவோ, மதம், கொள்கை சார்ந்தோ உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு நடத்தப்படும் கொலைகளுக்கு மரண தண்டனைதான் தீர்வாக இருக்க வேண்டும் என்பது இல்லை.

ஒரு மனிதன் தன்னுடைய தவறை நினைத்து திருந்துவதற்கான வாய்ப்பைக் கொடுப்பதற்கு முன்பே அவனை தூக்கில் போடுவதால் சமுதாயத்திற்கு எந்த பலனும் இல்லை என்பதே உண்மை.

தற்காலத்தில் பெருகிவரும் வெடிகுண்டு கலாச்சாரங்களுக்கும் வன்முறை சம்பவங்களுக்கும் மரண தண்டனை தீர்வாக முடியாது. மாறாக அவர்களை அத்தகைய சூழ்நிலைக்கு உட்படுத்தும் காரணிகளைக் களைய முற்படுவதே அரசுகளின் கடமையாக இருக்க வேண்டும். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சமுதாயத்தின் அடிப்படை தீமைகளை விரட்ட முயன்றால் இத்தகைய வன்முறை கலாச்சாரங்கள் மெல்ல பின்வாங்கும் என்பது உறுதி.

ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முயலும் அரசால், வன்முறைகளையும் வெடிகுண்டு கலாச்சாரத்தையும் குறைக்க இயலும்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் முதன்முறையாக சட்டபூர்வமாக மரணதண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனைக்கு பதிலாக ஜாமீனில் வெளிவர முடியாத ஆயுள் தண்டனை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 1963ஆம் ஆண்டிலிருந்து அந்த மாநிலத்தில் யாரும் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படவில்லை என்று அந்த நாட்டினர் நெஞ்சுயர்த்துகிறார்கள்.

ஐரோப்பிய நாடுகளும், லத்தீன் அமெரிக்க நாடுகளும் மரண தண்டனை ஒழிப்பை வரவேற்றுள்ளன. ஆனால் அரபு நாடுகள் இதை எதிர்க்கின்றன.

ஒரு மரண தண்டனைக் கைதி சிறையில் பல வருடங்களைக் கழிக்க நேரும்போது, அந்த புதிய சூழலில் அவருக்கு மனமாற்றம் ஏற்படலாம். புத்தகங்கள் முதலியவற்றின் துணைகொண்டு நல்ல இயல்பையும் அவர் பெற வாய்ப்புகள் அதிகம். வெளியே வரும்போது அவருக்கான வாழ்க்கைச் சூழல்களையும் அரசு ஏற்படுத்தித் தரலாம். இதன்மூலம் குற்றங்கள் குறையும். இதைவிடுத்து, அவரின் செயலால் ஏற்பட்டுள்ள பாதகங்களை அவர் உணரும் முன்னரே அவருக்கு மரணதண்டனை கொடுக்கப்படுவதால் என்ன பயன்?

சூழ்நிலையின் கோரப்பிடியில் சிக்கி பாதகங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை என்பது கண்டிப்பாக நிரந்தர தீர்வாக இருக்க முடியாது. அவர்களின் சந்ததிகளை மனதில் வைத்து ஒரு நிரந்தர தீர்மானம் ஏற்படுத்த வேண்டும்.

சென்ற தலைமுறையில் குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களையும், பண்பாட்டையும் போதித்துவந்த நிலை தற்போது மாறியுள்ளது. குழந்தைகளை தங்களின் கனவுகளை ஏற்றும் பொம்மைகளாக மாற்றிவரும் தற்காலத்திய பெற்றோர்களே இத்தகைய வன்முறைக் கலாச்சாரங்களுக்கும் காரணமாக இருக்கின்றனர்.

குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் அவர்களுக்கு எதிராக சமுதாயம் ஏற்படுத்தும் மாற்றங்கள் பெரும்பாலும் அவர்கள் அழிவுப்பாதையில் செல்லவே வழிவகுக்கும். பெரியவர்களின் வார்த்தைகளுக்கும் அனுபவங்களுக்கும் மதிப்புக் கொடுத்துவந்த இளைய தலைமுறையினர், தற்காலத்தில் கிடைக்கும் வாழ்க்கை சூழல்களால், மாறிவரும் சமூக மாற்றங்களால் வன்முறை மனங்களைக் கொண்டவர்களாகவே வளர்கின்றனர்.

 மாறிவரும் சமூக நிலைமைகளில் அதிகப்படியான வன்முறைகளுக்கு மன்னிப்பு வழங்குதல் என்பது நடைமுறை சாத்தியமாக இருக்காது; இதனால் சிறைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது போன்ற வாதங்களை மரண தண்டனை ஒழிப்பிற்கு எதிரானவர்கள் முன் வைக்கலாம். ஆனால் எந்த மனிதனும் பிறக்கும்போதே குற்றவாளியாகப் பிறப்பதில்லை. அவனுடைய வாழும் சூழல் மற்றும் அவனது வாழ்வில் அவன் எதிர்நோக்கும் பற்றாக்குறைகளே குற்றங்களுக்கான காரணிகளாக இருக்கின்றன.

வன்முறைக்கு தீர்வு வன்கொலையாக இருக்க முடியாது என்பதை நினைவில் நிறுத்தி உலக நாடுகள் அனைத்தும் இணைந்து மரணதண்டனைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்கும் திட்டவட்டமான செயல்பாடாக அது இருந்தால், சமுதாய முன்னேற்றத்திற்கான நல்ல தீர்வாக அது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மறுமொழியொன்றை வழங்குக