துப்புரவு அறிதல்
அனைவரும் சமம், இருப்பதை பொதுவாக்க வேண்டும் என்ற கோஷங்கள் ஒரு புறம் அறிஞர்களாலும், தலைவர்களாலும் மேடைப் பேச்சுகளிலும் எழுத்துக்களிலும் வலியுறுத்தப்பட்டு வந்துக் கொண்டிருக்கிறது. ஆயினும். சமூகத்தில் கீழ்தட்டு மக்களின் வாழ்க்கைநிலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. சுதந்திரத்திற்கு முன்பு வெள்ளையர்களால் அதிகமாக அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தினர், சுதந்திரத்திற்குப் பின்னரும் அதே நிலையில் நீடித்து வருவது வேதனைக்குரிய விஷயமாகவே உள்ளது.
நமது சமூகத்தில் ஒரு சாராருக்கு மட்டும் கிடைத்து வரும் வாழ்க்கையின் இன்பங்கள், மற்றொரு சாராருக்கு மறுக்கப்பட்டு வருவதை மறுக்க இயலாது. வளர்ந்துவரும் இன்றைய சமூகத்திலும் கீழ்நிலையில் உள்ளவர்கள் காலங்காலமாக ஒரு மனிதன் செய்யத் தயங்கும் வேலை நிலைகளில் தொடர்ந்து ஈடுபடுவது என்பது தடை செய்யப்படாத ஒன்றாகவே நிலவி வருகிறது.
தலைமுறைத் தலைமுறையாக இத்தகைய கீழ்நிலை மக்கள் துப்புரவுப் பணிகளை செய்யும் ஒரு இயந்திரமாகவே மாற்றம் பெற்று விட்டனர் என்பதே வருத்தத்திற்குரிய உண்மையாக உள்ளது.
இந்த வேலைகளை இவர்கள் செய்ய முற்படும்போது ஏற்படும் வலிகளையும், இவர்களின் சந்ததியினர் எதிர்கொள்ளும் இழிநிலைகளையும் சொல்கிறது ‘துப்புரவு அறிதல்’ என்ற குறும்படம்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கன்னியப்பன் என்ற மலம் அள்ளும் தொழிலாளிக்கு எதிரில் ஒருவர் வந்து அமர்ந்தவுடனேயே அவருக்கு கண்களில் கண்ணீர் கொப்பளிக்கிறது. காரணம் என்னவாக இருக்கும்?
அவரின் நினைவலைகளுடனேயே நம்மையும் பயணிக்க வைக்கிறார் இயக்குநர். மருத்துவமனையில் தன்னுடைய மனைவியுடன் சிகிச்சைக்காக செல்கிறார் கன்னியப்பன். அவரைப் பரிசோதிக்கும் மருத்துவர், அவர் செய்யும் மலம் அள்ளும் வேலையைத் தொடர்வதும், அந்த வேலையின் பொருட்டு மது அருந்துவதும் தொடர்ந்தால், அது அவரின் உயிருக்கு ஆபத்தாக அமையும் என்று அறிவுறுத்துகிறார்.
மருத்துவரின் ஆலோசனையையும், மனைவியின் எடுத்துரைத்தல்களையும் உதாசீனம் செய்யும் கன்னியப்பன் குடிப்பதையும், மலம் அள்ளுவதையும் தொடர்கிறார்.
ஒருநாள் ஓய்வுடன் அவர் வீட்டிற்கு வெளியில் அமர்ந்திருக்கும்போது, மனிதர் கழிவை மனிதர் அள்ளுவதை நிறுத்த வலியுறுத்தி கோஷங்கள் போடும் ஒரு சிலரை பார்க்க நேரிடுகிறது. தங்களின் நன்மையைக் கருதி அவர்கள் போராடுவதை பார்க்கும் கன்னியப்பன் தங்களின் பிழைப்பில் மண் அள்ளிப் போடுவதாக அவர்களைப் பற்றி தன் நண்பனிடம் ஏளனம் செய்கிறார்.
வங்கியில் பணிபுரியும் ஒருவர் உள்பட போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் காவல்துறையினர் அந்த இடத்தில் இருக்கும் கன்னியப்பனையும் கைது செய்கின்றனர். அங்கேயும் உயரதிகாரி ஒருவரின் வீட்டில் அடைத்திருக்கும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய கையுயர்த்துகிறார் கன்னியப்பன்.
இதையடுத்து உடல்நலம் மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கன்னியப்பன், மலம் அள்ளுபவர்களின் வாழ்விற்காக போராடியவர்களில் ஒருவரான, வங்கி ஊழியரின் வருகையைக் கண்டே கண்ணீர் வடிப்பதாக நகர்கிறது படம்.
மருத்துவமனைக்கு வரும் அந்த வங்கி ஊழியர், கன்னியப்பனின் மனைவிக்கு ஒரு பள்ளியில் வேலை வாங்கித் தந்துள்ளதாகவும், அவரின் குழந்தையின் பள்ளிப் படிப்பை கவனித்துக் கொள்வதாகவும், அவருக்கும் நல்ல வேலைக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறுகிறார். இந்த அளவில் கதை முடிவடைகிறது.
துப்புரவுப் பணியாளர்களின் வேதனைகளைச் சொல்லும் இந்தக் குறும்படம், அவர்களின் குழந்தைகள் எதிர்கொள்ளும் இழிநிலைகளையும் கூற முற்பட்டுள்ளது. கன்னியப்பனின் மகன் பள்ளியில் அறிமுகம் செய்துக் கொள்ள நேரும்போது, தன்னுடைய தந்தை மலம் அள்ளுகிறார் என்று சொல்லத் தயங்குவதையும், அவ்வாறு கூறியவுடன் கூட இருக்கும் மற்ற மாணவர்கள் நகைப்பதையும், குறும்படம் அதன் போக்கில் கூறியுள்ளது. இது மலம் அள்ளுபவர்கள் மட்டுமில்லாமல் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் வேதனைகளுக்கு ஆளாவது குறித்த மறுகோணத்தை பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்துகிறது.
மேலும் இறுதியில் வங்கி ஊழியர் மூலம் தன்னுடைய வாழ்க்கைக்கு புதிய வழி கிடைப்பதையும், தன்னுடைய மனைவி மற்றும் மகன் போகும் பாதையில் பிரகாசமான ஒளி தெரியும் வகையிலும் இயக்குநர் படம் பிடித்துள்ளார்.
‘ஒரு மனிதனின் மலத்தை இன்னொரு மனிதன் அள்ளுவது பாவம், கொடுமை, நான் இன்னொரு முறை பிறக்க நேரிட்டால் அவர்களின் வீட்டில் பிறந்து, அவர்களை மனிதத் தன்மையற்ற இத்தகைய கொடுமைகளிலிருந்து மீட்பேன்’ என்ற காந்தியடிகளின் வாசகங்கள் மற்றும் மலம் அள்ளுபவர்களின் பணிச்சூழல்களை புகைப்படங்களின் வாயிலாக வெளிப்படுத்தியிருப்பது நல்ல முயற்சி.
மலம் அள்ளுவதை தேவத் தொழிலாகச் செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும், அதை எதிர்த்துக் கோஷங்களும் வலுத்துவரும் இன்றைய காலக்கட்டத்தில் வெளிவந்துள்ள இந்தக் குறும்படம் சமுதாயத் தீமைகளை கூற முற்பட்டுள்ளது வரவேற்கத் தக்கதே. ஆயினும் மலம் அள்ளும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் சார்பாக வெளிவந்துள்ள இந்த குறும்படம் அவர்களின் வலியை இன்னும் ஆழமாகக் கூற முற்பட்டிருந்தால், மற்றவர்களின் கழிவுகளை அள்ளும் அவர்களின் வாழ்வில் ஒளி கண்டிப்பாக மலர்ந்திருக்கும்.