கொடிது கொடிது ஏகாந்தம் கொடிது. . .
அன்னிய மோகத்தில் நமது கலாச்சார ரீதியான வாழ்க்கையை இழந்துக் கொண்டிருக்கிறோம். அன்று நம் நாட்டினர் வாழ்ந்த இயற்கையோடியைந்த வாழ்க்கையையும் உணவே மருந்து என்ற பழக்கத்தையும் தொலைத்துவிட்டு, பலவகையான உடல்நலம் மற்றும் வாழ்க்கைக் குறைகளையும் வைத்துக் கொண்டுத் தவிக்கும் நிலையை அடைந்திருக்கிறோம். வெளிநாட்டினரே நம்முடைய யோகா, உணவே மருந்து முறைகளை எண்ணி வியந்து வரும் வேளையில் நாம் அதையெல்லாம் தொலைத்துவிட்டிருக்கிறோம்.
இதேபோன்று, வயதானவர்களின் அனுபவங்களையும், அவர்களின் ஆலோசனைகளையும் ஏற்கும் மனநிலை அற்ற நிலையில் அவர்களை உதாசீனப் படுத்திவருகிறோம்.
வயதானவர்கள் பூமிக்குப் பாரம் என்று கூறி அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு பின்பு உண்மையை உணர்ந்து மனம் வருந்திய மன்னனின் கதைகளைப் படித்திருந்தாலும், அந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் மனநிலை இன்றி வாழ்ந்து வருகிறோம்.
ஆனால் மாறிவரும் சூழ்நிலைகளில் ஆண்களும் பெண்களும் பணத்தைக் குறிவைத்து தங்களது வாழ்க்கையோடில்லாமல் அடுத்தத் தலைமுறைகளின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி வருகிறார்கள். இத்தகைய சூழலில் சென்றத் தலைமுறையினரைப் பற்றிய நினைவு ஏற்படுமா? யோசிக்கத் தக்க விஷயம்தான்.
தற்காலத்திய சூழலில் நகரப்புறங்களில் வாழும் வயதானவர்களாவது, மாறிவரும் கலாச்சார மாற்றங்களுக்கு ஏற்ப தங்களின் வாழ்க்கை சூழல்களை மாற்றிக் கொள்ளத் தலைப்படுகின்றார்கள். ஆனால் கிராமப்புற வாழ் வயதானவர்களின் நிலையை நினைத்தால் கவலை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
தான் பெற்ற மகனோ மகளோ நகர்ப்புறங்களிலோ, வெளிநாடுகளிலோ வாழ நேரும்போது, வயதானவர்களுக்கு தங்கள் கணவனோ, மனைவியோ தான் துணை. ஆனால் அந்தத் துணையும் தன்னுடன் இல்லாத சூழல் ஏற்படும்போது தனிமை என்பது தவிர்க்க இயலாததாக உள்ளது.
வாழ்வின் இறுதி நாட்களில் துணையை எண்ணி ஏங்கும் நிலை பெண்களை விட ஆண்களுக்கே அதிகமாக ஏற்படுகிறது என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது. இதற்குக் காரணம் ஆண்கள் தன்னுடைய தேவைகள் அனைத்திற்கும் பெரும்பாலும் பெண்களையே சார்ந்து வாழப் பழகியிருப்பதே.
தன் வயதான காலத்தில் தனிமையில் வாழ நேரும் பெண்களுக்கு இந்தக் கவலை ஏற்படாததற்குக் காரணம், வயதான காலத்தில் கணவன் உள்பட தமது உற்றாருக்கு பணிவிடை செய்யாமல் சுதந்திரமாக இருக்க இயலும். தன்னுடைய வாழ்க்கையை தானே அனுபவித்து வாழ முடியும் என்பதே.
ஆனால் எப்போதும் மற்றவர்களைச் சார்ந்திருக்கும் வகையில் வளர்க்கப்படும் ஆண்களின் நிலை- அதிலும் வயோதிக ஆண்களின் நிலை கேள்விக்குறியாகவே மாறிவிடுகின்றது.
இவ்வாறு வயோதிகத்தில் தனிமையில் வாழ வேண்டிய நெருக்கடி ஏற்படும் ஆணின் நிலையைக் குறிப்பிடும் வகையில் வந்துள்ள குறும்படம் தான் பி.எல்.முத்தையா கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள ‘தனிமை’. இரண்டரை நிமிடமே திரையில் ஓடக்கூடிய இந்த குறும்படம் பார்ப்பவர்களின் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்கள் எண்ணிக்கையிலடங்காது.
செட்டிநாடு கலாச்சார அமைப்புள்ள பெரிய வீட்டினுள் தனிமையில் தன்னுடைய வயோதிகத்தைக் கழிக்க நேரும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள சொக்கலிங்கம் செட்டியார் தன்னுடைய பாத்திரத்தை உணர்ந்து செய்துள்ளார்.
கதவு திறக்கிறது. கதவின் தாழ்ப்பாள், வீட்டின் விளக்கு முதலியவை ஆடி அடங்குகிறது. மாத்திரை, மருந்து, மூக்குக்கண்ணாடி முதலியவைக் காட்டப்படுகின்றன. அதைத் தொடர்ந்து வயதான சொக்கலிங்கம் காட்டப்படுகிறார். தொடர்ந்து நகரும் திரை நம்மை அவரின் இளமைக்கால புகைப்படங்கள், மனைவி, சொந்த பந்தங்கள், வாரிகள், நண்பர்கள் ஆகியவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களின்பால் நம்மை இட்டுச் செல்கிறது. சாப்பிடாமல் மிச்சம் வைக்கப்பட்டிருக்கும் உணவு, தொடர்ந்து வானத்தை வெறிக்கும் சொக்கலிங்கம் தொலைப்பேசி அழைப்பிற்கு பதில் சொல்லிவிட்டு தன்னுடைய நாற்காலியில் அமர்ந்து பின்பு விட்டத்தை பார்த்துக் கொண்டு படுத்திருக்கும் சொக்கலிங்கம் என்று தனிமையின் ஏக்கத்தை பலவிதங்களில் சொல்லத் தலைப்பட்டிருக்கிறது.
இந்த அளவில் முடிவுறும் இந்தக் குறும்படம் உணர்த்திச் செல்லும் அர்த்தங்கள் ஏராளம். இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று சொன்ன ஒளவை மட்டும், தொடர்ந்து அரசவைகளுக்கு சென்று மன்னர்களை சந்தித்து தன்னை எப்போதும் எல்லோரிடத்திலும் இணைத்துக் கொண்டிருக்காவிட்டால் கொடிது கொடிது ஏகாந்தம் கொடிது என்றே கூறியிருப்பார்.
வாழ்நாள் முழுவதும் தன்னைச் சுற்றி வாழ்ந்து வந்த தன்னுடைய மனைவி மற்றும் சுற்றத்தார் அனைவரும் தன்னைவிட்டு நீங்கிய நிலையில் பழையக் காலங்களை அசைப்போட்டபடி எத்தனை நாட்களைத்தான் கழிப்பது என்ற ஏக்கம் சொக்கலிங்கத்தின் நடிப்பில் எதிரொலிக்கிறது. தனிமையுடன் கூடிய வயோதிகத்தில் நோயும் கூட்டு சேர்ந்தால் நடப்பது என்ன என்பதை சொக்கலிங்கம் நடித்துக் காட்டியுள்ள விதம் கவனத்தில் கொள்ளத் தக்கது.
சொக்கலிங்கத்தின் இளமைக்காலப் புகைப்படத்தைக் காட்டிய இயக்குநர், உடனே தற்போதைய நிலையையும் காட்டியுள்ள விதம் குறித்தற்குரியது. இளமைப் புகைப்படத்தில், அதற்கேயுரிய பெருமிதம் மேலுற தெரியும், அவரின் தற்போதைய நிலையில், ஆற்றாமையும், இயலாமையும் வெளிப்படும் விதத்தில் படமாக்கியுள்ள விதம், சிறிய இடங்களிலும் தன்னுடைய கவனங்களை சிதறவிடாமல் இந்தக் குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு சான்று.
வானத்தை வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் சொக்கலிங்கத்தை காட்டியிருப்பது, தனிமைவாழ் வயோதிகரின் நிலையை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.
உணர்வுரீதியான இந்தப் படைப்பை தரமான முறையில் கொடுத்துள்ள இயக்குனருக்கு நல்ல பிரகாசமான எதிர்காலம் உள்ளது.
-ஸ்ரீபா