கனவுகள் மெய்ப்படும் காலம்….
பழமையும் கலாச்சாரமும் நிறைந்துள்ள வரலாற்றைக் கொண்டது தமிழ்நாடு. தமிழ் இலக்கியங்களும் இலக்கிய ஆசிரியர்களும் தொடர்ந்து இந்த மரபை கட்டிக் காத்து வந்துள்ளனர். அந்த வழியில் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் வழக்கில் இருந்த மருமக்கள் வழிச் சமூகத்தில் வாழ்ந்த நாஞ்சில் நாட்டு மக்களின் வாழ்வியல் நெறிகளையும், மாறிவந்த சமூகத்தில் அவர்களின் வழித்தோன்றல்கள் சந்திக்க நேர்ந்த பிரச்சனைகளையும் ஒரு குடும்பத்தின் கடைசி வாரிசின் வழி சொல்ல முற்பட்டிருக்கிறது இந்த புதினம்.
அதோடு நின்று விடாமல் இத்தகைய சமூகத்தில் வாழ்ந்த ஒரு பெண் எவ்வாறு தனக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுபாடுகளையும் தடைகளையும் மீறி பொது வாழ்க்கையில் சாதிக்க முற்படுகிறார் என்பதையும் அவரது வாழ்க்கையோடு இயைந்து கூறியுள்ளது.
உயரிய சிந்தனைகளும் நல்ல பழக்கவழக்கங்களும் சமூக சிந்தனையும் கொண்ட ஒரு தந்தையின் வழிகாட்டுதலில் சகோதர சகோதரிகளுடன் வாழும் ஒரு பெண்ணின் குழந்தைப் பருவத்தையும், உறவுச்சூழலில் அவளுக்குக் கிடைக்கும் அருகாமைகளும், கால மாற்றத்தால் அவளுக்குக் கிடைக்கும் சிறுமைகளும், கதகதப்புக்கு துணைபுரிந்த உறவுகளின் மூலம் அவள் மற்றும் அவளுடைய அன்னை இருவரும் சந்திக்கும் நெருக்கடிகளும், அதை உடைத்தெறிந்துவிட்டு புத்தகங்களின் உதவியால் தன்னுடைய பாதையை பொதுவாழ்க்கைக்கு அர்ப்பணிக்கத் துணியும் அவள், அரசியல் வாழ்வில் சாதனைகள் புரிந்து எவ்வாறு மனதாலும் செயலாலும் உயர்கிறாள் என்ற வாழ்க்கை வரலாற்றை கூறும் கதைக்களத்தைக் கொண்டுள்ளது இப்புதினம்.
“ஓ, என்னைப்போயி அதிகாலைப் பறவை – அதாவது இங்கிலீஷில் ணிணீக்ஷீறீஹ் தீவீக்ஷீபீ ம்பாங்க – அப்படிங்கற நீ. ரொம்ப சந்தோஷம்தான்மா எனக்கு. நான் அந்த அதிகாலைப் பறவையாக கூவி விட்டாலும், கொஞ்ச நேரத்திலே எல்லாப் பறவைகளும் முழிச்குக்கும். பொழுது விடியும், அதாவது சமுதாயம் மாறும்……..”
இந்த வரிகளில் சமூகத் தேடல்களைக் கொண்ட இந்தப் பெண், கட்டுப்பாடுகள் நிறைந்த பெண்களின் முன்னேற்றத்திற்கான முதல் அடியை எடுத்து வைப்பதோடு நில்லாமல் மாதர் சங்கம் அமைப்பதன்மூலம் மொத்த பெண்களின் வாழ்க்கைக்கு முன்னுதாரணமாக விளங்க முற்படுகிறார்.
சுதந்திரக் காலகட்டத்தில் இவ்வழி சமூகத்தினரின் வாழ்க்கை மாற்றங்கள் குறித்தச் செய்திகளைக் கூறமுற்படும்போது, எவ்வாறு சொத்துக்கள் மருமகன்களுக்குக் கொடுக்கப்பட்டது என்பனப் போன்ற செய்திகள் ஒப்பீட்டு ஆய்வுக்கு துணை செய்யும்.
கதையின் ஆரம்பத்தில் குழந்தைகளுக்கான கதைகளும் பாடல்களும் கதையில் விரவிக் காணப்பெறுகிறது. குழந்தைகளுக்கே உரிய ஆரவாரங்களையும் அவர்களின் உலகத்தின் தனித்தன்மைகளும் நிறைந்துக் காணப்படுகிறன. அவர்களுக்கான விளையாட்டுகள், அவர்களின் பார்வையில் உறவுகள் முதலியக் கருத்துக்களும் கூறப்பட்டுள்ளன. குழந்தைகள் தூங்குவதற்காக கூறுவதாக வரும் இந்தக் கதைகள் நம்மையும் தாலாட்ட தவறவில்லை.
கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பக்கால அரசியல் நுழைவுகள், அதன் கோட்பாடுகள், சிறப்புகள், கேரளாவில் அதன் ஆதிக்கங்கள், அதற்காக அதன் உறுப்பினர்களின் மெனக்கெடல்கள் முதலியவையும், அந்தக் கட்சியின் கோட்பாடுகளைக் கூறும் புத்தகங்கள் குறித்தக் குறிப்பும் படிப்பவர்களை ஈர்க்கும். இரண்டாம் உலகப்போர் குறித்த செய்திகளும், அதன்போது போர் நடந்த இடங்களில் மக்கள் பட்ட துன்பங்களையும் எடுத்துரைப்பது கண்டிப்பாக வரலாற்று மாணவர்களுக்கு துணைபுரியும். நந்தன் போன்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எவ்வாறு உதாரணப் புருஷர்களாக வாழ முற்பட்டனர் என்பதும் குறிக்கப்பட்டுள்ளன.
கூடி வாழ்ந்த உறவுகள் எவ்வாறு சொத்துக்காகவும் மற்ற சில காரணங்களுக்காகவும் கசப்புணர்வுகளை வளர்த்துக் கொண்டன என்பதையும், உயர்ந்த குணங்களைக் கொண்ட தந்தைக் கதாப்பாத்திரத்தைக் கூறி அவர்களின் குழந்தைகளின் எதிரிடை நிலையையும் தெளிவிப்பது போன்ற வாழ்க்கைக் குறிப்புகள் உளவியல் ரீதியாக அணுகத் தக்கன.
ஆறு குழந்தைகளுக்குத் தாயாகவும், கணவன் மற்றும் தன் உறவுகளை மட்டுமே தன் வாழ்க்கையென கருதி வாழும் தாய் கதாபாத்திரமும் எண்ணுதற்குரியது. நான்கு சுவர்களுக்குள்ளே தன்னுடைய உலகம் என்று வாழும் இவரது எல்லைகள் விரிகின்றது என்பதும் கதையின் ஊடாக கூறப்பட்டுள்ளன. வாழ்க்கை நெருக்கடிகள் இவரைப் பக்குவப்படுத்தி தன் மகளின் பொதுவாழ்க்கைக்கு ஒப்புதல் அளிக்க வைக்கிறது என்பதும் தன்போக்கிலேயே கதைக்களத்திலேயே வாசகர்கள் தெரிந்து கொள்ளும் வண்ணம் கூறப்பட்டுள்ளது.
“அம்மாவோ – அப்போதுதான் முதன்முதலாக முட்டையை உடைத்து வெளியே வரும் கோழிக்குஞ்சு அலகை மாத்திரம் வெளியே நீட்டிவிட்டு பின்னர் உள்ளுக்குள் இழுத்துக் கொள்வது போல் உலகைக் கண்டு பயப்படுகிறாள்”
என்பனப் போன்ற வரிகள் இவரின் நிலையைப் பிரதிபலிக்கின்றன. கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து வரும் ஒரு பெண்ணின் சுதந்திரத்திற்கான முதல் முயற்சியையே இவரது நிலை தெளிவிக்கிறது. கூட்டை விட்டு வெளிவரும் கோழிக்குஞ்சை, பெண்ணியம் தேடும் பெண்களுக்கு உவமையாகக் கூறியுள்ளதன் மூலம், சமூகத் தேடல்களை படிப்பவர்களின் பார்வைக்கு இந்தப் புதினம் விட்டுவிடுகின்றது.
விதவை மணங்களைப் பற்றியக் குறிப்புகள், அந்தக் கால கை மருத்துவக் குறிப்புகள் முதலியவையும் இந்தப் புதினத்தில் காணக் கிடைக்கின்றன.
மொத்தத்தில் பெண் என்பவள் ஆக்கும் சக்தியாக மட்டுமல்லாமல், அவளுக்கானத் தேடல்களை நோக்கியப் பயணங்களை எதிர்நோக்குபவளாகவும் உள்ளாள் என்பதை பறைசாற்றுகின்றது இந்தப் புதினம்.