காளியூட்டு
பழமை மரபு மாறாமல் ஒரு புதினத்தைப் புதிய தளத்தில் தர முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது இந்தப் புதினம். சுதந்திரக் காலக்கட்டத்தினை தனது நடையின் மூலம் இயல்பாக கொண்டுள்ள இந்தப் படைப்பு, அந்த கால மக்களின் வாழ்வியல்களைத் தத்ரூபமாக படம் பிடித்திருக்கிறது. சுதந்திரம் அடைவதற்கு முன்பும், அடைந்த பின்புமான ஒரு கிராமத்து மக்களின் இயல்பை கூற முற்பட்டிருப்பது சிறப்பு.
“சுதேசமித்திரன் படிக்கப்பட்டு பொருள் சொல்லப்படுகிறது. சுயராச்சியம் வருமா வராதா என்ற தர்க்கம் நடக்கிறது. கூர்ந்து கவனித்தால் அது வேண்டுமா-வேண்டாமா என்ற திசைகளிலும் மாறிச் செல்லும்”
என்பன போன்ற வரிகள் அந்த காலத்து மக்களிடையே அரசியல் நிலைப்பாடு எவ்வாறு இருந்தது என்ற விவாதங்களுக்கு நம்மை இட்டுச் செல்கிறது.
சுதந்திரம் என்றால் என்ன, சுயராச்சியம் என்றால் என்ன என்பன போன்ற உலகியல் ஞானம் குறைந்த ஒரு கிராமத்து மக்களின் வாழ்க்கைநிலைப்பாட்டைக் கூற முற்படும்போது அவர்களின் அரசியல் அறிவை உயர்த்திக் காட்டக் கூடாது என்ற முனைப்புடன் ஆசிரியர் கதையைக் கொண்டு சென்றிருக்கிறார். சிறிய இடங்களையும் கவனத்துடன் கையாண்டுள்ளதற்கு இது உதாரணம்.
இதை மற்றொரு இடத்திலும் அழகாக கையாண்டுள்ளார்.
“நாடு சுதந்திரம் பெற்றுவிட்டது என்று தெரிந்தபோதும் கூட தாங்கள் இருந்து கொண்டிருக்கும் பிரதேசம் இப்போது எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்ளாத மேலூர் வாசிகள். சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோதுங்கூட தாங்கள் யாருடைய பிரஜைகள் என்பதை ஐயந்திரிபற சொல்ல முடியாத மாந்தர்.”
இத்தகைய வரிகளில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டோர் தவிர்த்து மற்றவர்களின் மனதில் சுதந்திரத்தைப் பற்றிய தாக்கம் எவ்வாறு இருந்தது என்பதை மறைமுகமாக புரிய வைக்க முயன்றுள்ளதைப் பாராட்டவேண்டும்.
வாசிப்பு அனுபவம் என்பது வாசகனை உணர்வு ரீதியான வெளியில் இட்டு செல்லவேண்டும். படைப்பின் காலகட்டத்தை உணர வைக்க வேண்டும். அத்தகைய முயற்சியில் இப்படைப்பு வெற்றிக் கண்டுள்ளது. அந்த கால பழக்க வழக்கங்கள், மனிதர்களின் வெகுளித்தனம், இனவேற்றுமைகள், வட்டார வழக்குகள், சமூக ஏற்றத்தாழ்வுகள், ஆட்சிநிலை, சமயம் சார்ந்த நம்பிக்கைகள் ஆகிய அனைத்தையும் கதைத்தளத்தில் நம்மை உணர வைக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ள நடை இனிமை பயப்பதாக உள்ளது.
சிறுவயதில் ஊரைவிட்டுப் போன சிவதாணு என்பவரின் கதையை எடுத்துக் கொண்டு அதைப் பல்வேறு தளங்களில் விரிவாக்கி கதையின் ஊடாக மேற்கூறிய விஷயங்களைக் கூற முற்பட்டுள்ளது கவனிக்கத் தக்கது.
ஒரு சிறந்த புதினம் என்பது பக்கங்களை கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை. வாசகனின் மனத்தில் அது பதிவு செய்யும் காயங்களையும், அழுத்தங்களையும் உள்ளிட்டே படைப்பின் தாக்கம் அமையும். அந்த வகையில் இந்த நாவல் படிப்பவரின் உள்ளத்தில் அழுத்தங்களை பதிவுசெய்வதோடு மட்டுமில்லாமல் வரலாற்று நிகழ்வுகளையும் பதிவு செய்யும்.
இத்தகைய பதிவுகளுடன் சமய நம்பிக்கைகளையும், கூடவே திருவிழா குறித்த நிகழ்வுகளையும் கூற முற்பட்டுள்ளது வரவேற்கத் தக்கது. திருவிழாக்களில் இடம்பெறும் வில்லுப்பாட்டுகள் முதலியவற்றைப் பற்றிய பதிவுகளுடன் கூடவே அக்கால கட்டங்களில் இத்தகைய நாட்டுப்புற கலைகளின் ஊடாக எவ்வாறு தேசியம் வளர்க்கப்பட்டது என்பது புரிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு பற்றியப் புரிதல் இல்லாதவர்களுக்கு இது உதவும்.
காளியூட்டு என்பன போன்ற திருவிழாக்களின் காரண காரியங்களையும் பாத்திரங்களின் வாயிலாக வெளிப்படுத்த முயன்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பெண் தெய்வ வழிபாடு குறித்த தெளிவையும் கதையின் ஓட்டத்திலேயே கூற முற்பட்டுள்ளதை வரவேற்கலாம்.
“காரணம் எதுவும் இல்லாம – பிடிபடாம ஆனா தானா தோணி ஒரு அமைதியைக் கொடுக்கிறதைத்தான் கடவுள்னு சொல்லிக்கிட்டு வாரோம்.” – என்பன போன்ற வரிகளில் சமய நம்பிக்கைகளின் காரணங்கள் தெளிவுப்படுத்தப் பட்டுள்ளன.
அக்கால சொத்து பங்கீடுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன. நில உரிமைகள் எவ்வாறு தோன்றியிருக்கும் என்பன குறித்த விளக்கங்கள் வியப்பேற்படுத்துகின்றன. உயிர்ப்பலிகள் எவ்வாறு தாழ்த்தப் பட்டவர்களின் சவக்குழிகளுக்குக் காரணமாக இருந்தது என்பனக் குறித்த விளக்கங்கள் தற்போது நடக்கும் இத்தகைய இழிநிலைகளுடன் ஒப்பு நோக்க வைக்கின்றன.
மொத்தத்தில் பக்கங்களில் வார்த்தைகளை இட்டு நிரப்பும் புதினங்களுக்கு மத்தியில் குறைந்த பக்கங்களில் தரமான புதினத்தைத் தரமுடியும் என்பது இப்படைப்பின் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. மரபு மாறாமல் வெளிவந்துள்ள இத்தகைய படைப்புகள் மூலம் தற்காலப் படைப்பாளிகளின் கலாச்சாரத் தேடல்களுக்கு விடை கிட்டும்.
காளியூட்டு
ஆசிரியர்: மா. அரங்கநாதன்
வெளியீடு: காவ்யா
16, 2-வது குறுக்குத் தெரு,
டிரஸ்ட்புரம்,
கோடம்பாக்கம், சென்னை- 600 024.
ஆண்டு: டிசம்பர் 2006.